Monday, March 10, 2014

”புரிதல்...!”

வசந்தங்களை வாரிச்சுமந்து உன்னில்
வாரியிறைக்கும் இன்பச் சுரங்கம்
நானென்று இறுமாந்திருந்தேன்
இத்தனை காலமும்....

பொல்லாத பிள்ளையாய்
பொக்கிச புருசனாய் - என்
பெண்மைக்கு அரசனாய்
என்னகம் புகுந்தாய்....

இதயத்தின் உணர்வுகள் யாவுமூற்றி
இச்சைகள் தீர கச்சைகள் கலைந்து
மூச்சடைத்த வேளைகளில் - உன்
முத்துக் குளியல்களில்...

பொங்கும் இன்பக்கடல் உணர்வலைகள்
முத்தமாய் மாறிமாறி உன்மீதான - என்
முத்தமாரி பொழிந்தேன் வழிந்தேன்
மனதால் மொழிந்தேன்...

இடையூரும் உன் விரல்களில்தான்
இன்பத்தின் ஊற்றுகள் இருக்குமிடம்
அறிந்தேன் - என் பெண்மைக்குள்
பேரின்பம் கண்டவன் நீ...

எத்தனை நடந்தும் எத்தனைக் கடந்தும்
இத்தனை அரிய இரகசியம் உன்னில்
இருப்பது அறியாது போனேனே..!
இங்குதான் நான் மடந்தையோ...?!

நடந்த கொடுமைக்கு நான் உடந்தையோ...?
இதயம் சுமந்த சீவனின் இடம்தான் எனதோ..?!
இரண்டற கலந்தவளும் இரண்டாவதாய் கலந்தவளும்
இவளுக்கான சந்தர்ப்பமோ...?! சமூகத்தின் சடங்கில்

இழைக்கப்படும் கொடுமைக்கு நானும் இலக்கோ..?!
இதயம் கவருதல் இயற்கையா..? கலையா..?
இடவலம் அமர்ந்தவள்தான் நானா...?! - உன்
இதயம் அமர்ந்தவள் ஆவேனோ...?!

கடைவழித் தெருமுனைக் கடக்க முனைந்த
ஒருநொடிப் பொழுதுதான் உன்னில் உறைந்தவள்
என் கண்ணில் விழுந்தாள் எதேச்சையாய்...
என்னவன் சுமந்து திரியும் எழிலோவியம்..!

அன்பிலும் அழகிலும் பண்பிலும் பாசத்திலும்
இருவரும் பெண்கள்தான் அத்தான்... - உன்
ஆத்மாவை சுண்டி இழுத்தவள் அவளா...? நானா..?
பட்டிமன்றம் தவிர்க்கவே விரும்புகிறேன்

இத்தனைநாள் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த
இதமான உன்னிதயச் சுகமும்...
இன்னும் பிறவும் அனுபவித்தவள் ஆயிற்றே..?!
இறுக்கம் நெருக்கம் புரியாதவளா நான்...

மொட்டாய் அரும்பிய ஆசைகள்
கொத்தாய் எழும்பிய உணர்வுகள்
அவளின் சொத்தாய் சேமித்த உன் ”காதல்”
அறிந்தேன் என் அகமுடையவனே...

என்னை சுமந்தபடியே இதையும் சுமந்து
எத்தனை நாள் திரிந்தாயோ...? ஏக்கம் தளர்ந்தாயோ...?
பிள்ளைகள் பிறந்தாலும் நமக்கு - உன்
பிழியும் மனதின் ஆசைகளை என்ன செய்தாயோ...?

என் மன்னவா..! உன்னை உடுத்தினேனா...?
உன் உயிரைப் பிழிந்து படுத்தினேனா...?
என்றேனும் என் வாழ்வின் அர்த்தம் சொல்,
அன்றேனும் என்பாரம் இறங்கட்டும்...

அன்பில் அலைமோதும் இதயம் கண்டேன்
அவளும் உன்னைச் சுமந்தே அலைகிறாள்
இதயப்பிழை செய்யா இளம் பூங்கொடியாள்
இலையுதிர் காலத்து கொடியாய்...
என்செய்வேன்...! என்னிதயமே..!! சொல்.

அன்பனே எனக்காக உன்னாசைகள் துறந்தாயோ...?!
அன்புடன் எனக்கான ஆசைகள் சுமந்தாயா...?!
உன் விருப்பு வெறுப்பு விளம்புகிறாள்
விழிகள் விரிய வியக்கிறேன் நான்...

மொழிகள் கடந்த புரிதல் எங்களுக்குள்
மொழியும்போதே புரிய முடிந்தது
வழியே வந்தவள்தான் உன்வாழ்வாய்
வந்தவளென்று விழிகளால் வீசி மொழிந்தாள்...

உன் ஆண்மை ததும்பும் உணர்வுகள் அவளுள்
அவள் பெண்மை தழுவும் இன்பம் உன்னுள்
இவள் கண்டுகொண்ட உணர்வு வெடிப்பை
எப்படி எழுதுவேன் எனக்கானவனே...!

மனிதம் உரிமை கொண்டாடுதல் பிழையோ..?!
மனிதரை உரிமைக்கோரல் பெரும் பிழையோ...?!
உன் மனம் புரிந்த என் மனிதம் கேட்கிறது..?
மாமா..., என்ன செய்வேன் நான்...!

அன்பில் என்னை அணைத்து வென்றவனே..!
உனக்கான அன்பு இதோ துவளுகிறது...
வாழ்க்கை தொலைத்து வசந்தம் இழந்து
பிணம் போலும் நாட்கள் கழிக்கிறாள்...

பின்னும் யோசிக்கிறேன் அவளை பிரிந்த
பின்னும் யோசிக்கிறேன் இன்னும் இதயம்
இதற்கொரு விடைப்பகர வில்லையே...?
பெண்மை புரிந்தவன் நீ - பெண்ணாய்

உன்னை பெற்றவள் நான்....
கேட்கிறேன் என் கம்பீரமே...! ஒப்புவாயா..?
என்ன செய்யப் போகிறாய்...?
என்னையும் அவளையும்...?

வாழ்தல் என்பது என்ன மாமா...?
வாழ்ந்தவள் கேட்கிறேன் உன்னை
என்னை என்சுகங்களை இத்தனை பத்திரமாய்
என்றும் காத்தவன் என் காதலனே...!

உன்னை உன்சுகங்களை நான் என்ன செய்தேன்...?
ஒப்புக்கும் ஊருக்கும் உன்னோடு ஒட்டிக்கொண்டேனா...?
ஒரு பழக்க வழக்கமாய் உன்னைக் கட்டிக்கொண்டேனா?
உன்னில் என்னைக் கலந்தவள் கேட்கிறேன்...

உன் சுகங்கள் விரும்பும் நான்
உன்னில் வாழ்தலும் உன்னால் வாழ்தலும்
உன்னோடு வாழ்தலும் உனக்காக வாழ்தலும்
உனக்காக செய்தேனா...? எனக்காக செய்தேனா...?

என்னால் நீ எங்கேனும் வாழ்ந்தாயா சொல்
என் சுவாசங்களில் குடியிருப்பவனே..!
என் நலன்களில் உன்சுகங்கள் கண்டவன் நீ
என்னை சுகப்படுத்தி தன்னை முறைப்படுத்தியவன்

உன்னை சிறைப்படுத்தி விட்டேனோ என்னில்...?!
உன் சிறகுகள் வெட்டிய கரங்களில் என்கரங்களுமா..?!
எத்தனை மென்மையானவன் நீ...! உன்னை
இத்தனை வன்மையாய் காலம் தண்டித்ததோ...?!

இல்லை உன்காதல் துண்டித்த
இரும்புச் சூழல் எதுவாயினும்
உடைத்தெறியும் பேராண்மை உண்டேடா உனக்கு..
அன்பில் இடப்பட்ட அணையில் சிறைப்பட்டாயோ..?!

உன்காதல் வாழவிரும்பும் பேதைதான் நான்...!
ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்னைச் செம்மையாக்கி செழுமையாக்கி
உண்மையாய் வாழ்வித்தவன் நீ வாழணும்டா...

என்றும் காதலுடன்,
இல்லாள்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க காதல்...!

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நீளமான கவிதை...
கலக்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

பெரிய.....கவிதை....அழகு !