Monday, April 25, 2011

"சொல்லத் துடிக்குது மனசு..."


எனதன்பு நண்பன் 'மனசு' சே.குமார் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அவரின் எண்ணப்படி உங்களுக்கு இந்த காதல் கதையை எழுதுகிறேன். முதல் முறையாய் கதை எழுதுகிறேன். பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

....... இனி காதலுக்குள் (கதைங்க..) செல்வோம்.

காதல் என்பது என்ன..? உணர்வா...? உணர்ச்சியா...? பருவமா..? பக்குவமா..? வருவது தெரியாமல் வந்து உயிர் குடிக்கும் மதுவா..? வந்து அமர்ந்து கொண்டு மனம் தின்னும் கழுகா..? வாழ் நாட்களில் நாட்களை பலிக்கொண்டு வாழ்க்கையை திசை திருப்பும் விதியா..? உள்ளத்துள் மூளும் கேள்விகளுக்கு விடைத் தெரியாத ஒரு தருணத்தில் அவன் அவளை சந்திக்கிறான். அவனுள் விழுந்து கிடக்கும் கேள்விக்கு விடையாய் அவள் நிற்பது போல் ஒரு எண்ணம் அவனுக்கு.

வசந்தங்கள் யாவும் சுமக்கும் பருவத்துள் பூத்த பளிங்கு மலராய் அவள்.... உலகத்தை அலட்சியமாய், அனாயாசமாய் எதிர்நோக்கும் அவள் இயல்புக்கு சற்றே முரண்பாடாய் அவன் தெரிகிறான். எல்லாவற்றையும் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் அவளுக்கு 'அவனை' அப்படி கொள்ள முடியவில்லை. அவன் அவளை ஈர்க்கின்றானா..? அல்லது அவளை அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று ஈர்க்கிறதா..? குழப்பமாய் இருப்பது போல் தோன்றினாலும் மனதுக்குள் அவனை இரசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. மௌனமாய் இரசிக்கிறாள். மெல்ல அவனை விழுங்கி தன்னை சீரணிக்கிறாள். வெட்கம் உதடுகளில் வழிகிறது.

யார் தொடங்குவது...? எங்கே தொடங்குவது..? எப்படித் தொடங்குவது...? இருவருக்குமே இந்த குழப்பம்...(!)., இன்றேனும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆதங்கம்... இருவருக்குள்ளும். யார் சொல்வார்...? என்கிற தவிப்பு தாகமெடுக்க.... இனிமை வேகமெடுக்கிறது. இவர்கள் சந்திக்க சிந்திக்கிறார்கள். அதற்குள் இவர்களுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்போம்.

அவன் : ரவிவர்மா  
அவள் : ரதி

ரவிவர்மாவின் மௌனம் கலைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியா இன்ப வெள்ளம் கரைபுரள... அணைபோட முயன்று தோற்றதின் அடையாளமாய் 'வெட்கம்'. அந்தப் பூங்காவின் அமைதியான இடத்தில் ரதியும், ரவிவர்மாவும். அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதற்றம் மறைக்கிறாள்.
அவன் உதட்டையும் நகத்தையும் மாறிமாறிக் கடித்த வண்ணம் இவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் உற்று நோக்குகிறான். கசிகிறது காதல்.

அவன் ம்ம்க்கும்... என செருமிக்கொண்டு., அவளிடம் பேச எத்தனிக்கிறான். அவள் அவனின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளவே வாழ்வது போல் கூர்மையாகிறாள். மனம் தவித்து.. மருகுகிறாள். இருவரும் ஒரு முறை பார்த்துக் கொண்டு இதழ் பிரிக்காமல் சிரிக்கிறார்கள். அவன் இதழ் பிரிக்க... அவள் இமைத் துடிக்கிறாள்.

சொல்லிவிடத் துடிக்கும் மனதின் போராட்டத்தை மௌனமாய் சீரணிக்கிறான். அவள் அவனை ஆசுவாசப் படுத்த முயல்கிறாள். தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து தருகிறாள். அவனும் அதை வாங்கிக் குடிக்க, அந்த அழகை அவள் இரசிக்கிறாள். தன்னை சரியாகப் புரிந்து கொள்ளும் அவளை பெருமையாய் பார்க்கிறான். எங்கே அவளைப் பார்த்தால் உளறிவிடுவோமோ என்கிற அச்சத்துடன் பார்வையை சற்றே தாழ்த்திக்கொள்கிறான். பேச எத்தனிக்கிறான்.

"பிடிச்சிருக்கு.." ஒற்றை வார்த்தை உதிர்க்க இத்தனை பிரயத்தனம். அவளோ இவனை சீண்டிப்பார்க்க விரும்பி "என்னப் பிடிச்சிருக்கு..?" என்கிறாள். இவன் மௌனமாய் அவள் கண் பார்த்து "உன்னைப் பிடிச்சிருக்கு" என்கிறான். அவள் சந்தோசத்தின் உச்சியில் நின்றுக்கொண்டு "எனக்கும்" எனச் சொல்லி வெட்கினாள். ஒருவழியாய் உள்ளுக்குள் நிகழ்ந்த உணர்வு போராட்டத்தில் விடுதலைக் கிடைத்த சந்தோசம் அவர்களுக்கு.

6 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உள்ளத்தின் காதலின் உணர்வுப்போராட்டத்தை வெளிப்படுத்தும் கதை அருமை.. மேலும் எழுதுங்கள் உங்கள் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழ்க்காதலன் said...

நன்றி தோழி பிரஷா. உங்கள் பாராட்டுகள் எமக்கு உற்சாகம் தருகின்றன.

sathishsangkavi.blogspot.com said...

"பிடிச்சிருக்கு.." உங்க கதை பிடிச்சிருக்கு...

தமிழ்க்காதலன் said...

நன்றி சங்கவி. முதல்முறையாய் வருகைத் தந்து கருத்து தந்தமைக்கு என் அன்பின் நன்றி.

sulthanonline said...

காதலை உணரும் தருணம் , வெளிப்படுத்தும் நிமிடம் அந்நேர இதயத்துடிப்பு ஆகியவற்றை மீண்டும் உணரச்செய்துவிட்டீர்கள். கவிதை போன்ற கதை பிடிச்சிருக்கு.

Kayathri said...

nice....pidichiriku....(unga ezhuthu)