Thursday, February 03, 2011

"காதல் கவசம்...!"

என்ன தவம் செய்தனரோ ஏந்திழையே..!
நின்னை பெண்ணாய் பெற்றிடவே பெற்றோர்
அன்னைத் தமிழும் அரவணைக்கும் நின்னை
ஆயுள் முழுதும் பார்த்திருப்பேன் உன்னை...

யாண்டும் யான்பெற்ற பெரும் பேறு...
யார் பெற்றார் உன் உற்றார்..?
யௌவனத்து எழிலார் கலைவடிவே..! கரும்பே..!
யாதொரு தவம் செய்தேன்..? இன்னெழிலே..!

முற்றும் தமிழ் மணக்கும் முறுவளே...!
பற்றும் பைந்தமிழ் பரவசப் பூங்குழலே...!
நிற்றல் நடத்தல் கற்றேன் நின்தமிழில்
சாற்றும் தமிழ் போற்றும் ஆரணங்கே...!

காற்றும் கடலும் நிலமும் பேசும்
காதல் மொழி ஊற்றுப் பெருக்கெடுத்து
உணர்வுக் குடமுடைத்து வானூற்றும்
மழைபோல் வந்தடையும் நின் வாசல்...

ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...!
ஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..!
தோற்றுப்போகும் என்றெண்ணி துவண்டு விடாதே...!
தொல்லைகள் தீர்ந்தெம் எல்லைகள் சேர்வாய்.

அறுபத்து மூவரின் தமிழையும் தத்தெடுப்பேன்..!
ஆருயிரே..! தனியொருவனாய் முத்தெடுப்பேன்,- தயங்காதே..!
கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...!
காரணம் நீ என் எழிலோவியம்...!!
 
பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்
பெரும் பேறு பெற்றார் பேருவகை
உற்றார் காட்டும் அன்பில் கற்றார்
கற்றார் களிப்பை பெற்றார் காண்.

முந்திச் சரிந்த தோற்பை முடிச்சவிழ..!
பாங்காய் பதமாய் இதமாய் இடுப்பவிழ..!
ஈரைந்தின் பாரம் இறக்கி வைத்தார்..! 
என்னவளே இன்னும் சுமக்கிறேன் நான்...

நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!
அன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..!
ஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..!
சூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்

வாழும் கலையும் விதி மாற்றும்
நிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..!
காரும் நீரும் கதிரவன் கரங்களில்
தோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..!!

 

தூயவளே..! உனக்கென்ன...? 
அன்புகடல் நீ...!
ஆர்ப்பரிக்கும் அருட்சுடர் நான்... வா,
இன்பக்கடல் சமைப்போம்,- இனியவளே 
இனி இல்லை தயக்கம்...!, 
இன்னுமென்ன மயக்கம்...?         

7 comments:

எஸ்.கே said...

//வாழும் கலையும் விதி மாற்றும்
நிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..!
காரும் நீரும் கதிரவன் கரங்களில்
தோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..!! //

கவிதை முழுதும் நிறைய வார்த்தை பிரயோகங்கள் மிக அருமையாக உள்ளன!

Chitra said...

நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!
அன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..!
ஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..!
சூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்


.....அருமையாக அன்பை வெளிப்படுத்தும் கவிதை. ரசித்தேன்.

Philosophy Prabhakaran said...

சொலவடைகள் ரசிக்க வைத்தன...

'பரிவை' சே.குமார் said...

உன் தமிழ்ச் சொல்லாடல்கள் சிலிர்க்க வைக்கின்றன, வார்த்தைப் பிரயோகம் அருமை.... மீண்டும் ஒரு நல்ல கவிதை.

செல்வா said...

//ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...!
ஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..!//

//கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...!
காரணம் நீ என் எழிலோவியம்...!!
//

கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ ?

MANO நாஞ்சில் மனோ said...

//பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்
பெரும் பேறு பெற்றார் பேருவகை
உற்றார் காட்டும் அன்பில் கற்றார்
கற்றார் களிப்பை பெற்றார் காண்//

ஆத்தீ தமிழ் இப்பிடி ஊருது ஆர்ட்டீசியன் ஊற்று மாதிரி......
சூப்பர் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ ?///

செல்வா இன்னைக்குதான்ய்யா உண்மைய பேசுறான்...