Monday, September 07, 2009

எனக்குள் நான் !

என் நினைவுகள் தின்று செரித்து
என் உணர்வுகள் கொன்று குவித்து
என் சிந்தனையை சிதையாக்கி
தீ மூட்டும் உன் நினைவுகள் ….
என் கண்கள் சிந்தும் கண்ணீரை
என் பார்வை கக்கும் கனலே
பற்றி எரிக்கிறது …!
உன் உணர்வு தரும் வெம்மையால் .
கண்ணீரோடு காணாமல்போனது
என் கனவுகளும்தான் …!?
ஏந்திழையே !
என்னை கொன்றிருந்தாலும்
உன்னை மன்னித்திருப்பேன் .
என் உணர்வுகளை கொன்றிருக்கிறாய் …
என் செய்வேன்.!?

முன்பெல்லாம் …
விழி மூடும்போது
விதி வந்து சிரித்தது .
இப்போதெல்லாம் ….
நீ வந்து சிரிக்கிறாய் …!
சொல்லடி பெண்ணே ..!
நான் எதை நம்ப ???
உன்னையா …!
விதியையா …!!


மின்னலுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை ..!
ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில்
உயிர் குடித்துவிடுகிறீர்கள் ..!?

மின்னலுக்கும் உனக்கும் ஒரு வேற்றுமை ..
மின்னல் உயிர் குடிக்கிறது …
வலிப்பதில்லை ..!
நீ உயிரோடு மனதையும் கொல்கிறாய்.
வலிக்கிறது ..!
தறிகெட்டு ஓடும் என்
தவிப்புகளை
தவிடுபொடியாக்குகிறது
உன் காந்தவிழிப் பார்வை .
என் எண்ணங்களில்
தீ மூட்டி ,
என்னையே எரிக்கிறது
உன் மோனப்புன்னகை .
என் இதயம் பற்றி எரிந்தாலும்
கவலை படமாட்டேன் .
அது சுற்றி அல்லவா
வருகிறது …உன்னை ..!

உன் இமை மூடும்போதெல்லாம்
என் இதய தேசத்தில் மின்வெட்டு .


எனக்கு சொந்தம் என்று
சொல்லிக்கொண்ட
என்னுடையவைகளை ..
உனக்கு சொந்தமாக்கிகொண்டாய்.
உன்விழி பின்பற்றி என் இமை மூடுகிறது.

நீ
உறங்குகிறாய்.
நான் விழித்திருக்கிறேன்.
உன் இரவுகள் என் பகல்கள்.

உன் உள்சுவாசம்
என் உயிர் பற்றி இழுக்கிறது

உன் வெளி சுவாசம்
என் மனம் தொட்டு வருடுகிறது .
இந்த இழுபரியில்தான்
என் இதயம் துடிக்கிறதா பெண்ணே !?
உண்மை சொல் .!

நீ பசியில் வயிறு குழைகிறாய்.
நான் பரிதவித்து உயிர் குழைகிறேன்.
நீ உணவு உண்ணுகிறாய்.
நான் கை கழுவுகிறேன்.

என் ஒரு நாளை
உன் முழு நாளாக்கி கொள்கிறாய்.
ஒவ்வொரு நாளும் இப்படியே ...
சொல் !
நான் நானாவது எப்போது ?

என் வாழ்வு தேனாவது எப்போது ?

No comments: